வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:28 IST)

10 அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு - தங்க தமிழ்செல்வன் பேட்டி

அதிமுக கட்சி தற்போது சசிகலா கையில்தான் இருக்கிறது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா.
 
அப்போது அவரை தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் நேரில் சந்தித்து பேசினர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவரை சென்று சந்திக்கவில்லை. ஆனால், பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவரிடம் தொலைப்பேசியில் பேசினர் எனக் கூறப்படுகிறது. அதன் பின் பரோல் முடிந்து அவர் சிறைக்கு திரும்பிவிட்டார்.
 
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “சசிகலாவை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்தனர். அதை பார்க்கும் போது கட்சி இன்னும் அவர் பக்கம்தான் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இதை அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், மாவட்ட செயலாளர்களும் நன்கு உணர்ந்திருப்பார்கள். 
 
அவர் மூலமாக பதவிக்கு வந்த பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.  எனக்கு கிடைத்த தகவல் படி 10 அமைச்சர்கள் மற்றும் 40 எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது” என அவர் தெரிவித்தார்.