வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By மு.சிவக்குமார்
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2015 (17:28 IST)

ஞானோதயம்

பக்கத்து வீட்டு பையன் பாபுவை சுட்டிக்காட்டி
‘படி படி’ என்று படபடத்தாள் அம்மா
உதாசீனப்படுத்தி ஊர் ஊராய் சுற்றினேன்
பல லட்சம் சம்பளத்தில் பாரிசில் வேலையாம்
பாரின்காரில் பந்தாவாக வந்திறங்கினான் பாபு
சோற்றுக்கே வழியின்றி சொந்த ஊரில்  நான்
பட்டென்று கிளம்பினேன் டுடோரியலுக்கு
பத்தாம் வகுப்பு பாஸ் செய்ய



‘வேலைக்கு போ... வேலைக்கு போ’
வார்த்தைகளால் வறுத்தெடுத்தார் அப்பா
வேதனையில் விரைந்தேன் டாஸ்மாக் கடைக்கு
வேகா வெயிலில் வியர்வை சிந்த சிந்த
வேர்கடலை விற்றுக் கொண்டிருந்தார் அப்பா
கண்கலங்கி ஏறி ஏறி இறங்கினேன் கடைக்கடையாய்...

‘மது குடிக்காதே... மது குடிக்காதே’
மனமுருகி வேண்டினாள் மனைவி
மறுத்துவிட்டு மது மயக்கத்தில் திளைத்தேன்
ஏலத்திற்கு வந்தது இரண்டு மாடி வீடு
மண்டை போடும் நாளையும் மருத்துவர்கள் குறித்தார்கள்
பிப்ரவரி பத்து...பாடையில் படுத்துக்கிடந்தேன்
நெற்றியில் ஒட்டும் நாலனா காசுக்காக
நடுத்தெருவில் நிற்கதியாய் நின்றாள் என்னவள்.