வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. பெருமாள் மணிகண்டன்
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (14:44 IST)

அரவிந்த் சுப்ரமணியன் - இறக்குமதியாகும் நிதி ஆலோசகர்கள்

அர்விந்த் சுப்ரமணியன், இந்திய நிதித் துறையின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு IMF ஆளுமையான ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வாங்கி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வகித்த பதவி இது. சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு தலைமை பொருளாதார ஆலோசகராக அர்விந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
Brentwood Institutions என அழைக்கப்படுகிற உலக வங்கி, பன்னாட்டுப் பொருளாதார நிதியம் போன்றவற்றில் இருந்தே பெரும்பாலும் பொருளாதார ஆலோசகர்கள் நியமிக்கப்படுவது, இந்தியாவில் வழக்கமாகி வருகிறது. ஜவகர்லால் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த தீபக் நய்யர் போன்று வெகு சில பொருளாதார நிபுணர்களே இந்தியாவின் பிரதான நிறுவனங்களில் இருந்து ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் அனைவரும் இறக்குமதியே! சுதேசி பொருளாதாரம் பேசுகிற பாரதிய ஜனதா அரசின் பொருளாதார ஆலோசகரும் Peterson institute for economicsஇல் இருந்தே வரவழைக்கப்பட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி பொறுப்பெற்றுக் கொண்ட நாள் முதல் வெவ்வேறு தளங்களில் சுதேசி சிந்தனைகளை முன் எடுத்துச் செல்கிறார். காங்கிரசின் மேற்கத்திய தாக்கத்துடன் கூடிய அணுகுமுறைகளைப் பல இடங்களில் கண்டித்துள்ளார், ஆனால் தலைமை பொருளாதார ஆலோசகர் நியமனத்தில் ராஜீவ் காந்தி காலம் முதல் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்து வரும் அணுகுமுறையையே கை கொள்கிறார். 
 


அர்விந்த் சுப்ரமணியன், இந்தியாவின் 12ஆவது தலைமைப் பொருளாதார ஆலோசகராகத் தனது 54ஆவது வயதில் பொறுப்பேற்கிறார். உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் செல்ல வேண்டிய பாதை குறித்த ஆலோசனை வழங்க இந்தியா, வெளிநாட்டுப் பட்டம் மற்றும் உலக வங்கி / IMF அனுபவம் உள்ள நபர்களையே தேடித் தேடி நியமிக்கிறது. நீண்டகால நோக்கில் இந்திய பொருளாதாரத்தில் இறக்குமதி செய்யப்படும் நிபுணர்கள் வழங்கக் கூடிய ஆலோசனைகள் குறித்து இந்தியாவின் முக்கியமான பொருளாதார அமைப்புகளில் இருப்பவர்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபடியே உள்ளனர். இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் Dennis Weatherstone Senior Fellow ஆக அர்விந்த் சுப்ரமணியன் இருந்தார். பன்னாட்டுப் பொருளாதார நிதியத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமே தலைமை ஆலோசகர் பதவிக்கு இவர் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட காரணமாக இருந்தது. 
 
உலக வணிக அமைப்பு எனப்படும் WTO குறித்துத் தொடர்ந்து எழுதி வரும் அரவிந்த், இந்தியாவிற்கும் உலக வணிக அமைப்பிற்குமான கொள்கை அளவிலான நிலைப்பாடுகள் (Policy Matters) குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், உணவுப் பொருள்களுக்கு மானியம் வழங்குகிற உலக வணிக அமைப்பின் கொள்கைகளுடன் இந்தியா பெரிய அளவில் முரண்படுகிறது, இந்த நிலைப்பாட்டை முன்னர் அரவிந்த் சுப்ரமணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  
 
 
இத்தகைய சூழலில் பிரதமர் மோடி அரவிந்த் சுப்ரமணியனைத் தேர்வு செய்தது பொருளாதார விசயத்தில் தனக்கும், தனது அரசுக்கும் ஆலோசனை சொல்கிற இடத்தில் விமர்சகர் ஒருவர் இருப்பது நல்லது எனக் கருதி இருக்கலாம் என்றே கணிக்கத் தோன்றுகிறது. பன்னாட்டு வணிகம் சம்பந்தமான விசயங்களில் சுப்ரமணியன் நிபுணராகப் பார்க்கப்படுகிறார். மோடி உலக அரங்கில் இந்தியாவின் வணிக எல்லைகளை விரிவாக்க எண்ணுகிறார். இந்தியா, பன்னாட்டு வணிகத்தில் தனது பங்கை உயர்த்த, அரவிந்த் சுப்ரமணியனின் ஆலோசனைகள் பெரும் உதவியாக இருக்கக் கூடும். 
 
நிதிக் கொள்கை (fiscal policy) விசயங்களில், அரவிந்தின் ஆலோசனைகள் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்ற சந்தேகங்களைப் பொருளாதார நிபுணர்கள் எழுப்புகிறார்கள். அதற்கு ஏற்ப அரவிந்த் சுப்ரமணியன், மோடி தலைமையிலான NDA அரசு பொறுப்பேற்றுக் கொண்ட உடன் கொணர்ந்த இடைக்கால பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
மோடிக்கு முன்னர் பிரதமராக இருந்த மன்மோகன், உலகம் அறிந்த பொருளாதார நிபுணராக இருந்தார். உலக அரங்கில் தனது அரசின் சிறப்பை உணர்த்த, பன்னாட்டு வணிகத்தில் இந்தியாவின் வீச்சை அதிகப்படுத்துவதே மோடி இப்போது செய்ய வேண்டிய செயல். பன்னாட்டு வணிகத்தில் முக்கிய பங்காற்ற சுப்ரமணியனின் ஆலோசனைகள் வழிகாட்டுதலாக இருக்கும். அதன் மூலம் உலக அரங்கில் மோடி அரசு பற்றிச் சிறப்பான கருத்துகள் உருவாகும் என்ற நோக்கில் தமிழர் அரவிந்த் சுப்ரமணியன், மத்திய அரசின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.