1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சுண்டைக்காய்...!!

சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது கசப்பு சுவை உடையது. இந்த கசப்பு தன்மையானது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு  உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு இது  உதவுகிறது.
சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். குடல் புண்களை ஆற்ற சுண்டைக் காயானது நுண்புழுவால் உண்டான  நோய்கள், வலி நோய்கள் போன்றவற்றை போக்கும். மலச்சிக்கலை போக்கி அஜீரணக் கோளாறுகளை போக்கும்.
 
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை இவற்றை தண்ணீரில்  கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் இருமல், கபக்கட்டு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல், மூலக்கடுப்பு, மூலச்சூடு போன்ற நோய்கள் நீங்கும்.  இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரை பெருக்கும். உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை நீக்கும்.
 
சுண்டைக்காயில் உள்ள இலைகள், காய், வேர் என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இதன் இலைகள் இரத்த கசிவை தடுக்க கூடியவை. காய்கள்  கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றது. இந்த முழு தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டதாகும்.
 
நீரிழிவு நோயினால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், வயிற்றுப்பெருமல், உடற்சோர்வு போன்றவை நீங்க சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து  பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் போதும்.
 
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊற வைத்து, வெயிலில் காயப்போட்டு எடுத்து பத்திரப்படுத்தி, தினமும் குழம்பு செய்தோ அல்லது எண்ணெயில்  வறுத்தோ சாப்பிடலாம். இது மார்பு சளியை நீக்கும்.
 
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதல் உடையவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்று கிருமிகள் உடையவர்கள்  வாரம் 3 முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்று கிருமி, மூலக்கிருமி போன்றவை நீங்கும். வயிற்றுப்புண் ஆறும்.
 
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். ஆசனவாய் அரிப்பு  நீங்கும்.