வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நிலவேம்புக் குடிநீர் எவ்வாறு தயாரிப்பது; அதன் மருத்துவ குணங்கள்

கொள்ளை நோய், விஷக் காய்ச்சல் இதைத்தான் தற்போது சிக்குன் குனியா, டெங்கு என்பதுபோன்ற பல பெயர்களில் நவீன மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்தும் நோக்கில் கஷாய வடிவில் கொடுக்கப்படுவதுதான் இந்த 'நிலவேம்புக் குடிநீர்'.

 
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர்  தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.
 
தயாரிக்கும் முறை:
 
இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம்  தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது  எட்டு அல்லது 16 மடங்கு என சூரணம் அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார். 
 
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும்.  நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த  நாள்வரை வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது.
 
நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15  மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல்  உட்கிரகித்துக் கொள்ளும்.
 
மருத்துவக் குணங்கள்
 
இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும்  கொண்டது. 
 
கோரைக்கிழங்கு, பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்.