1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (15:10 IST)

அமைச்சரின் செல்ல நாயைத் தீவிரமாக தேடிய காவல் துறையினர் - காங்கிரஸ் விமர்சனம்

ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் நாய் காணாமல் போனாதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் உடனடியாக நாயைத் தேடும் பணியில் ஈடுபட்டதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
 
ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோரின் 5 மாதமேயான செல்ல நாய், கடந்த சனிக்கிழமை அன்று காணாமல் போனதாக சொடாலா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இதையடுத்து காவல் துறையினர் நாயை தேடும் பணியைத் துவங்கினர். காணாமல் போன நாய் குறித்த தகவல் பரவியவுடன் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் நாயைக் கொண்டுவந்து ஒப்படைத்தார். 
 
தான் காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது நாயைக்  கண்டதாகவும், அதனை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்க எண்ணியிருந்ததாகவும், தற்போது நாயின் உரிமையாளர் யாரென தெரிந்ததால் அவரிடம் நாயைச் சேர்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதற்கிடையே, வைஷாலி நகர் பகுதியில் கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடாமல் நாயைத் தேடுவதில் தீவிரமாக இருந்தார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 
 
 
 
 
 
 
.