1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (16:43 IST)

மகனின் சடலத்துடன் விடிய விடிய கொட்டும் மழையில் நின்ற தாய்...

வீட்டின் உரிமையாளர் அனுமதிக்காததால், தனது மகனின் சடலத்தை இரவு முழுவதும் கொட்டும் மழையில் ஒரு பெண் வைத்திருந்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
ஹைதராபாத்தில் வெங்கடேஸ்வரா நகர் என்கிற பகுதியில் வசிப்பவர் ஈஸ்வரம்மா. இவரின் 11 வயது மூத்த மகன் சுரேஷ் கடந்த 13ம் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் மரணம் அடைந்தான். 
 
இந்நிலையில், அவனது உடலை வீட்டிற்குள்ளே எடுத்து செல்ல ஈஸ்வரம்மா வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா அனுமதிக்கவில்லை. அவரின் மகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது எனவும், எனவே, சடலத்தை வீட்டிற்குள்ளே எடுத்து வருவது அபசகுணமாக அமையும் எனக்கூறி அவர் மறுத்து விட்டார். 
 
இதனால், தன்னுடைய மகனின் உடலை வீட்டின் வெளியே வைத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நின்றுள்ளார் ஈஸ்வரம்மா. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சடலைத்தை வீட்டின் உள்ளே வைக்க அனுமதி தருமாறு ஜெகதீஷுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர் தனது நிலைப்பாடில் உறுதியாக இருந்ததால், உடனடியாக ஒரு கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் அவரின் மகனின் சடலைத்தை வைத்தனர். மேலும், இறுதி சடங்கிற்கு தங்களால் ஆன பண உதவியும் செய்தனர். 
 
இப்படி ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட ஜெகதீஷின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.