1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (18:38 IST)

வாக்குச்சாவடியில் விஜயசாந்தி தகராறு; அதிகாரிகளுடன் சண்டை!

தெலங்கானாவில் நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை பார்வையிட வந்த காங்கிரஸ் கட்சியின் புதுவரவு நடிகை விஜயசாந்தி, தேர்தல் அதிகாரி டி.ஆர்.எஸ். கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகராறில் இறங்கினார்.
தெலங்கானாவில் உள்ள மேடக் தொகுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட வந்த நடிகை விஜயசாந்தி, முட்டைகுடா என்ற வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்டார்.
 
அந்த வாக்குச்சாவடியில் உள்ள மதுசூதன் என்ற அதிகாரி சந்திரசேகர ராவின் மருமகனான ஹரீஷ் ராவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு டி.ஆர்.எஸ். கட்சியின் சின்னமான காருக்கு வாக்கு சேகரித்ததாக விஜயசாந்தி குற்றஞ்சாற்றினார்.
 
ஆனால் விஜயசாந்தியின் குற்றச்சாற்றை அந்த அதிகாரி மறுத்துள்ளார். தம் மீதான குற்றச்சாற்றை விஜயசாந்தி நிரூபிக்க வேண்டும் என மதுசூதன் கேட்டுக்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்த விஜயசாந்தி நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா நிறைவேறிய பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.