வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:51 IST)

இறந்த மகனை தோளில் தூக்கிச்சென்ற தந்தை : அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை

இறந்த மகனை தோளில் தூக்கிச்சென்ற தந்தை : அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை

மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் மரணம் அடைந்த தன் மகனை தோளிலேயே ஒருவர் தூக்கி சென்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பசல்கஞ்ச் என்ற பகுதியில் வசிக்கும் சுனில்குமார் என்பவரின் மகன் அன்ஸ்(12)க்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. உள்ளூர் சிகிச்சை பார்த்து குணமாகாததால், தன் மகனை கான்பூரில் உள்ள லால லஜபதிராய் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

கடுமையான காய்ச்சல் இருந்த மகனை தனது தோளிலேயே தூக்கிச் சென்றுள்ளார் சுனில்குமார்.  ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். அங்கிருந்து 250 மீட்டர் துரமுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். 

தன்னுடைய மகன் உடல்நிலை மோசாக உள்ளது. எனவே தயவு செய்து இங்கேயே அவனுக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சுனில்குமார் மன்றாடியும் அவர்கள் கேட்கவில்லை.அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி கேட்டுள்ளார் சுனில். அதையும் அவர்கள் தர மறுத்துவிட்டனர். எனவே வேறு வழியின்றி, சுனில்குமார் மீண்டும் தன் மகனை தோளில் தூக்கி சுமந்தபடி அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அன்ஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சுனில்குமார் தோளிலேயே அவன் உயிர் பிரிந்திருக்ககூடும் என தெரிகிறது.  கதறி அழுத சுனில்குமார், மீண்டும் தன் மகனின் உடலை தோளில் சுமந்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

அவர் தன் மகனை தோளில் தூக்கி சென்ற வீடியோக்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதை அறிந்த அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கான்பூர் மருத்துவமனை மேல் அதிகாரி சந்திரா சென் சிங்கை இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறையின் உயர் மட்ட குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.