1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (09:39 IST)

​சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: 15,000 பேர் தேர்ச்சி

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15,008 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 
 
ஐஏஎஸ், ஐபிஎஸ், உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் (குடிமை பணி) முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23ந்தேதி நடைபெற்றது.
 
இதற்காக, 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.65 லட்சம் பேர் தேர்வை எழுதினர். அதாவது விண்ணப்பித்தவர்களில் 49 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 15,008 பேர் தேர்ச்சி பெற்றதாக மத்திய பணியாளர் தேர்வாணைய செயலர் ஆஷிம் குரானா தெரிவித்தார்.
 
தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.