வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 29 நவம்பர் 2015 (16:24 IST)

நெஸ்லே இந்தியாவிற்கு அடுத்த சோதனை - பாஸ்தாவில் அதிக ரசாயனம் என ஆய்வில் தகவல்

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
 

 
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற நூடுல்ஸ் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவத்திடம் ஆய்வு செய்யவில்லை எனக்கூறி தடையை நீதிமன்றம் நீக்கியது.
 
பின்னர் உரிய பரிசோதனைகளுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மீண்டும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவ் பகுதியில் இருந்த கடையில் சேகரிக்கப்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தா பாக்கெட்டுகள் தேசிய உணவு பரி‍சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பி.எம் என்பது 6 பி.எம். என்ற அளவில் உள்ளது. இதனால் நெஸ்லே பாஸ்தா பாதுகாப்பற்றது என ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இது குறித்த கடிதம் நெஸ்லே நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது என்றும், அதை அவர்கள் திருப்பி அனுப்பி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில் நெஸ்லே நிறுவனத்தில் உணவுப்பொருட்களை சோதனை செய்வது போன்று அனைத்து ஃபாஸ்ட் புட் உணவு பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.