1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (16:09 IST)

இப்படியும் ஒரு விழாவா?? டிக் டாக் திரைப்படவிழா – புனேவில் ருசிகர சம்பவம்

இந்தியாவில் டிக் டாக் மோகம் இளைஞர்களிடையே தலைவிரித்தாடுகிறது. டிக் டாக் செயலி மூலம் வீடியோ வெளியிட்டு பலர் பிரபலம் ஆகியிருக்கிறார்கள். பலர் சினிமா வாய்ப்புகளுக்காக கூட டிக் டாக் வீடியோ செய்து ஷேர் செய்கிறார்கள்.

டிக் டாக் வீடியோக்களை பார்ப்பதற்கென்றே ஒரு மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நபரை ஃபாலோ செய்வதன் மூலம் நாள்தோறும் அவர்கள் வெளியிடும் டிக்டாக் வீடியோக்களை கண்டு களிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் டிக் டாக் வீடியோ செய்பவர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் புனேவை சேர்ந்த பிரகாஷ் யாதவ். கேட்பதற்கு காமெடியாக தெரிந்தாலும் உண்மையாகவே இந்த விழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் பிரகாஷ்.

இதுபற்றி அவர் “டிக் டாக் எல்லா பக்கமும் பிரபலமாக இருக்கிறது. எல்லாரும் டிக் டாக் வீடியோ செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் சில கல்லூரிகளை கடந்து போகும்போது கூட பல மாணவர்கள் வெளியே நின்றபடி டிக் டாக் செய்வதை பார்த்திருக்கிறேன். இதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து முடிவானதுதான் இந்த விழா.
இந்த விழா கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்டு 20 வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.


சிறந்த காமெடி, சிறந்த முகபாவம், சிறந்த டிக்டாக் ஜோடி என மொத்தம் 12 வகையான தலைப்புகளில் டிக் டாக் வீடியோக்களுக்கு பரிசு கொடுக்க இருக்கிறோம். டிக் டாக் வீடியோவின் மூலம் நல்ல விஷயங்களையும் செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காக சமூக அக்கறை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளையும் கொடுத்துள்ளோம்.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 33,333 ரூபாயும், இரண்டாவது பரிசாக 22,222 ரூபாயும், சான்றிதழும் வழங்கப்படும்.

அதுபோல இந்த விழாவுக்கு வீடியோ தயார் செய்து அனுப்பும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

டிக் டாக் என்பதை வெறும் வெட்டி வேலை, நேரம்தான் கெடும் என பலர் பேசி வருகிறார்கள். ஆனால் அந்த டிக் டாக் செயலியை வைத்து பல நல்ல காரியங்களையும் செய்ய முடியும் என்று நம்புவதாக பிரகாஷ் யாதவ் கூறியுள்ளார்.

டிக் டாக் வீடியோவால் இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகமாவதாக சமீபத்தைய சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எதை வைத்து பிரகாஷ் யாதவ் டிக் டாக் ஆரோக்கியமான விஷயம் என நம்புகிறார் என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.