1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (08:33 IST)

திகார் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகள்: 2 ஆவது கைதி உத்தரப் பிரதேசத்தில் கைது

சுரங்கம் அமைத்து டெல்லி திகார் சிறையிலிருந்து தப்பியோடிய 2 கைதிகளுள் 2 ஆவது கைதியை டெல்லி காவல்துறையினர் உத்தரப் பிரதேசத்தில் கைதுசெய்தனர்.
 
தீவிர கண்காணிப்புக்கு பெயர் போன டெல்லி திகார் சிறையிலிருந்து தப்பியோடிய 2 ஆவது கைதியும் காவல்துறையினரிடம் பிடிபட்டார். 
 
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறையாக டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறை உள்ளது. இந்த சிறையை பலத்த பாதுகாப்புக்கு உதாரணமாக சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில், 2 கைதிகள் திகார் சிறையிலிருந்த சனிக்கிழமை நள்ளிரவு தப்பிச் சென்றனர்.      
 
திகார் சிறையில் சிறை எண்.7 ல் கொள்ளை வழக்குகளில் கைதான பைசான் மற்றும் ஜாவித் என்ற 2 கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இருவரும் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து சிறை கட்டிட எண்.8 க்கு சென்றுள்ளனர்.
 
இந்த சிறை கட்டிடம்தான், சிறை வளாகத்தின் எல்லைப் பகுதியாகும். பின்னர், இருவரும் சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் வேகவேகமாக சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். பிறகு அதன் வழியாக வெளியேறி அங்கிருந்த சாக்கடை வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, மறுநாள் காலை வழக்கம்போல் சிறை அதிகாரிகள் கைதிகளை கணக்கெடுத்தபோதுதான் கொள்ளையர்கள் இருவரும் தப்பிச்சென்ற விவரம் அவர்களுக்குத் தெரிய வந்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள், தப்பியோடிய கைதிகளை தேடும் வேட்டையில் உடனடியாக இறங்கினர். அப்போது பைசான் என்ற கொள்ளையன் மட்டும் அவர்களிடம் சிக்கினார். இதைத் தொடர்ந்து, ஜாவித் என்ற கைதியை அவர்களால் திவிரமாகத் தேடிவந்தனர்.
 
இதைத் தொடர்ந்து கைதி ஜாவித், சிறையில் இருந்து தப்பிவிட்டதை காவல்துறையினரிடம் திகார் சிறை அதிகாரிகள் புகார் அளித்தனர். மேற்கு டெல்லியில் உள்ள ஹரிநகர் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில், மற்றொரு குற்றவாளியான ஜாவித்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.