வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:33 IST)

இனி இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதா? – வருகிறது புதிய சட்டம்

ஏடிஎம் மையங்களில் நிகழும் பண மோசடிகளை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த வங்கிகள் முடிவெடுத்துள்ளன.

ஏடிஎம் மையங்களில் நடைபெறும் பணம் கொள்ளை மற்றும் போலி காடுகள் மூலம் பணம் எடுப்பது போன்ற சிக்கல்கள் குறித்து கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான வங்கியாளர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டது.

18 வங்கிகள் கலந்து கொண்ட அந்த சந்திப்பில் இரவு நேரங்களில் பண பரிவர்த்தனையை குறைக்க புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஒருவர் ஏடிஎம்மில் ஒருமுறை பணம் எடுத்தால் அடுத்த 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மீண்டும் பணம் எடுக்கமுடியாது என்ற திட்டத்தை செயல்படுத்த பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏடிஎம்மில் பணம் திருடும் குற்ற செயல்கள் இரவு நேரங்களிலேயே நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதவாறு புதிய அமைப்பை நிறுவவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகி உள்ளதால் இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாகவும், அதனால் இதை செயல்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைய மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஏடிஎம் மையங்களில் நடைபெறும் பண கொள்ளையை தடுத்து நிறுத்தவே இப்படியான புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக டெல்லி மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முகேஷ் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில் ஏடிஎம்மில் ஒரே நேரத்தில் இருமுறை பரிவர்த்தனை செய்யமுடியாது. மேலும் நினைத்த நேரங்களில் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முடியாது.