வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (07:12 IST)

40 ஆண்டு அரசியல், பல்வேறு பதவிகள், அனைவரும் மதிக்கும் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்

ஒரு அரசியல் தலைவர் அதிலும் ஒரு பெண் தலைவர் தான் இருக்கும் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர்களும் மதிக்கும் வகையில் நடந்து கொண்ட மிகச்சில தலைவர்களில் ஒருவராக சுஷ்மா ஸ்வராஜ் திகழ்ந்தார். தனது நாற்பது ஆண்டுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தாலும், கட்சி மாறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் விளங்கியதுதான் மிகச்சிறப்பானது
 
1952ம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி அரியானா மாநிலம் அம்பாலா என்ற பகுதியில் பிறந்த சுஷ்மா, சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார். தந்தை ஆர்.எஸ்.எஸ்.சில் தீவிரமாக இருந்து வந்ததால், அவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது.1970களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து தனது 18வது வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் சுஷ்மா. அம்பாலா கண்டோன்மெண்ட்டில் உள்ள சனாதன் தர்மா கல்லூரி சட்டம் படித்த சுஷ்மா ஸ்வராஜ், உச்சநீதிமன்றத்தில் ஒருசில ஆண்டுகள்வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
 
1977ம் ஆண்டில் எம்.எல்.ஏ. ஆகி, 25 வயதிலேயே அமைச்சராகவும் பொறுப்பேற்று கொண்டார். டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர், பாஜக பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவு அமைச்சர் போன்ற பெருமைக்குரிய பல பதவிகளை வகித்த பாஜகவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா
 
சட்டசபைக்கு 3 முறையும் மக்களவைக்கு 7 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மா, வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். அதன்பின்னர் 2014-19ல் மோடி அரசியல் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தபோது, வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் நாடு திரும்ப உடனடி முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்ட தமிழர்களை மீட்பதில் இவரது பெரும் பங்கும் இருந்தது.  சமூகவலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாடாளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சியினரின் நட்பை பெற்றவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு வருகை தந்த  இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் எனில் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளார். 
 
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாளில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ். தமது வாழ்நாளில் இந்த நாளைக் காண்பதற்காகத்தான் தாம் உயிர் வாழ்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவர் பதிவு செய்த கடைசி டுவீட் ஆகும்.
 
சுஷ்மாவின் மறைவு பாஜகவுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே ஒரு பேரிழப்பு தான். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்