வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (13:14 IST)

மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகிய இருவரும் மார்ச் 2ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மத்தியத் தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ள டெல்லி சிபிஐ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்ச் 2ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

 
இவ்வழக்கு கடந்த 13ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில் சில வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியது.
 
வழக்கில் தேவையான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளை ஏற்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று சிபிஐ கேட்டுக்கொண்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான உத்தரவை நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்துள்ளார்.
 
2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதிமாறன், நெருக்குதல் கொடுத்ததாக புகார் எழுந்தது. ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்கு பலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் 3ஆயிரத்து 500கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.