வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 1 செப்டம்பர் 2014 (12:47 IST)

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: உள்துறை அமைச்சகம்

தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு சாத்தியம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘சார்க்’ நாடுகளின் 17 ஆவது உச்சி மாநாடு மாலத்தீவில் நடைபெற உள்ளது. முன்னதாக தீவிரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு தொடர்பாக ‘சார்க்’ நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேபாளம் செல்கிறார். அங்கு பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சர் நிசார் அலிகானுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவலை உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அத்துடன், தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தும் வரை பேச்சு வார்த்தை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சகம், ”தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என உள்துறை அமைச்சகம் உறுதியான கருத்தை கொண்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதத்தையும் வன்முறையையும் நிறுத்தும் வரை பேச்சு வார்த்தை என்பது சாத்தியம் இல்லாத ஒன்று“ இவ்வாறு உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.