வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:14 IST)

ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்க வைத்த ஆசிரியர்: இப்படி ஒரு தண்டனையா?

ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்க வைத்த ஆசிரியர்: இப்படி ஒரு தண்டனையா?

தெலுங்கானா மாநிலத்தில் மாணவி ஒருவர் சீருடை அணியாமல் வேறு ஆடையில் வந்ததால் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆண்கள் கழிவறையில் மாணவியை நிற்கவைத்து தண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஐதராபாத்தை சேர்ந்த 11 வயதான மாணவியின் பள்ளி சீருடையை அவரது பெற்றோர் துவைத்து காய வைத்ததில் அது காயவில்லை. இதனால் வேறு ஆடையில் அவரை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் மாணவியின் டைரியில் அதுகுறித்த விளக்கத்தையும் எழுதி அனுப்பியுள்ளனர்.
 
இதனையடுத்து வேறு ஆடையில் மாணவி பள்ளிக்கு வந்ததை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவியிடம் விசாரித்துள்ளார். மாணவி நடந்ததை கூறி டைரியையும் காட்டியுள்ளார். ஆனால் அந்த ஆசிரியர் அதனை நம்பாமல் மாணவிக்கு தண்டனையாக அவரை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்துள்ளார்.
 
இந்த சம்பவம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. சக மாணவர்கள் என்னை பார்த்து சிரித்து அவமானப்படுத்தினர் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அந்த மாணவி வேதைப்பட்டுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை மாணவியின் டைரியில் எழுதி கொடுத்து விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.
 
இதனால் அவர் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் மனித உரிமை ஆணையத்தையும் நாடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராம ராவுக்கு தெரியவர அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது மனிதாபிமானமற்ற செயல், உரிய நடவடிக்கை இதற்கு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.