வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (08:07 IST)

பெங்களூருவில் தான்சானிய மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரம்: அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது

பெங்களூருவில், தான்சானியா நாட்டு மாணவியின் ஆடைகளைக் களைந்து, மானபங்கப்படுத்தி தாக்கிய விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் முகமது. இவர் பெங்களூரு எசருகட்டா பகுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
 
கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு இவர் எசருகட்டா சாலையில் தாசரஹள்ளி அருகே காரில் சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
 
அத்துடன், சாலையோரம் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த தம்பதி மீதும் மோதியது. இதில், சபானா தாஜ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய கணவர் சனஉல்லா படுகாயம் அடைந்தார்.
 
இதையடுத்து காரை ஓட்டிச்சென்ற முகமதுவை பொதுமக்கள் தாக்கி அவருடைய காரை தீவைத்து எரித்தனர்.
 
இந்நிலையில், அந்த வழியாக காரில் வந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவி உள்ளிட்டவர்கள் மீது அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
அப்போது, அந்த இளம்பெண்ணை சிலர் ஆடைகளை களைந்து மானபங்கம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
 
அத்துடன், அவர்கள் வந்த காரும் எரிக்கப்பட்டது. இதுகுறித்து சோழதேவனஹள்ளி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமதுவை கைது செய்தனர்.
 
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தான்சானியா நாட்டைச் சேர்ந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் சோழதேவனஹள்ளி காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் செய்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது 
குறித்து தான்சானியா நாட்டு தூதரகத்திற்கும் புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதனால் மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை கேட்டு கொண்டார்.
 
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
 
இந்நிலையில், காவல்துறை டிஜிபி ஓம்பிரகாஷ், பெங்களூரு மாநகர காவ்லதுறை ஆணையர் என்.எஸ்.மேகரிக் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
 
பின்னர் அந்த மாணவியை மானபங்கம் செய்து தாக்குதல் நடத்தியதாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் லோகேஷ் பங்காரி, வெங்கடேஷ், சலீம் பாஷா, பானுபிரகாஷ், ரகமத்துல்லா என்பது தெரியவந்தது.
 
இவர்களுள் லோகேஷ் பங்காரி பாஜகவை சேர்ந்தவர் என்பதும், மற்ற 4 பேர்ரும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
 
இந்த வழக்கு விசாரணை மத்திய குற்ற பிரிவு காவ்லதுறையிரிடம் ஒப்படைக்கப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.