வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (15:52 IST)

யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாஸை ஆதரித்து வாக்கு சேகரித்த அரவிந்த் கெஜ்ரிவால், யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு தங்கள் கட்சிக்கு   வாக்களிக்கும்படி கூறினார். 
அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் ஸ்ம்ரிதி இராணியும் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில், அமேதியின் ரனிகஞ்ச் பகுதியில் உள்ள ஷுக்லா பசாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால்,  'தேர்தல் நேரத்தில் நிறைய பேர் உங்களுக்கு பணம், புடவைகள் மற்றும் பிற பொருட்களை தருவார்கள். 
 
யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அது நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம்தான். உங்களிடம் இருந்து ஊழல் செய்த பணத்தை தான் அவர்கள் திருப்பி தருகிறார்கள். பணத்தை பெற்றுக்கொண்டு எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்.  
 

நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் நான் பாஜகவினரால் தாக்கப்படுகிறேன். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியினர் மோடியை தாக்கியதாகவும், பாஜகவினர் சோனியாவின் குடும்பத்தை தாக்கியதாகவும் நாம் கேள்விபடுவதில்லை.ஏனென்றால் இவர்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாடு உள்ளது.   
இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி தேர்தல் முடிந்ததும் இங்கு திரும்பி வரமாட்டார். பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்ம்ரிதி இராணி மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க சென்றுவிடுவார்' என அவர் பேசினார்.