வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (14:25 IST)

மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

மனைவியை மறைத்த மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஜசோதா பென் என்ற பெண்ணை தனது 17-வது வயதில் திருமணம் செய்துள்ளார். அதன்பின் சில ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
 
தற்போது, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறை பதவி வகித்து வருகிறார். இவர், குஜராத் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும்போது, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் தன் மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை.

ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வேட்புமனுவில் தன்னைப் பற்றிய தகவல்களை குறிப்பிடாமல் மறைத்திருந்தால், அது கிரிமினல் குற்றம் ஆகும்.
இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சம் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கலாம். நரேந்திர மோடி, சட்டசபை தேர்தலில் 4 முறை போட்டியிடும்போது, தன் மனைவியின் பெயரை வேட்புமனுக்களில் குறிப்பிடாமல் இருந்ததற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 20 ஆம் தேதி கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இவ்வாறு அம்மனுவில் வாராகி கூறியிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனுவை சட்டப்படி பரிசீலிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.