1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:44 IST)

16 சிறுமிகளை கொன்ற சுரேந்தர் கோலிக்கு தூக்கு உறுதி - உச்ச நீதிமன்றம்

16 சிறுமிகளைக் கொன்ற சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி புறநகரான நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் சிறுமிகள் மாயமானார்கள். இதில் 16 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற சுரேந்தர் கோலி, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தூக்கு தண்டனைக்கு எதிராக மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், அவனது தூக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
முன்னதாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொழிலதிபர் மொகிந்தர் சிங், அவரது வீட்டு வேலைக்காரரான சுரேந்தர் கோலி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த இருவருக்கும் காசியாபாத் சிறப்பு நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்தர் கோலியும், மொகிந்தர் சிங்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் 2009 செப்டம்பர் 11 ஆம் தேதி சுரேந்தர் கோலியின் தண்டனையை உறுதி செய்தது.
 
மொகிந்தர் சிங் விடுதலை செய்யப்பட்டார். தூக்கு தண்டனையை எதிர்த்து சுரேந்தர் கோலி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதேபோல ஜனாதிபதியும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து சுரேந்தர் கோலியை செப்டம்பர் 8 ஆம் தேதி தூக்கில் போட சிறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் இருந்து மீரட் ஜெயிலுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
 
இந்த நிலையில் தான் சுரேந்தர் கோலியை தூக்கிலிட நள்ளிரவில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இன்று அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதால் கோலி தூக்கு மேடைக்கு செல்வது உறுதியாகிவிட்டது.