வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (09:10 IST)

சுரங்கப்பாதை அமைத்து திகார் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள்

பாதுகாப்புக்கு பெயர் பெற்ற திகார் சிறையில் சுரங்கப்பாதை அமைத்து 2 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
 
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை என்று அழைக்கப்படுவது டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறை. இந்த சிறையை பலத்த பாதுகாப்புக்கு உதாரணமாக சொல்வார்கள். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இங்கிருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்பிச் செல்ல முடியாது என்றும் கூறுவதுண்டு.
 
இத்தகைய பாதுகாப்பு அரணை தகர்க்கும் விதமாக 2 கைதிகள் திகார் சிறையில் தப்பிச் சென்ற சம்பவம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது.
 
திகார் சிறையில் சிறை எண்.7 ல் கொள்ளை வழக்குகளில் கைதான பைசான் மற்றும் ஜாவித் என்ற 2 கொள்ளையர்கள் கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு அவர்கள் இருவரும் சிறை கட்டிட எண்.8 க்குச் சென்றனர். இந்த சிறை கட்டிடம்தான், சிறை வளாகத்தின் எல்லைப் பகுதி.
 
பின்னர் அவர்கள், இருவரும் சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் வேகவேகமாக சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக வெளியேறி அங்கிருந்த சாக்கடை வழியாக தப்பிச் சென்றுள்ளனர். 
 
மறுநாள் காலை வழக்கம்போல் சிறை அதிகாரிகள் கைதிகளை கணக்கெடுத்தபோது கொள்ளையர்கள் இருவரும் தப்பிச்சென்ற விவரம் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சிறை அதிகாரிகள் தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 
அப்போது பைசான் என்ற கொள்ளையன் மட்டும் அவர்களிடம் சிக்கினான். எனினும் நாள் முழுக்க தேடியும் ஜாவித் என்ற கைதியை அவர்களால் பிடிக்க முடியவில்லை.
 
இதைத் தொடர்ந்து கைதி ஜாவித், சிறையில் இருந்து தப்பிவிட்டதை காவல்துறையினரிடம் திகார் சிறை அதிகாரிகள் புகாராக அளித்தனர். மேற்கு டெல்லியில் உள்ள ஹரிநகர் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தப்பியோடிய ஜாவித்தை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், திகார் சிறையில் கைதிகள் சுரங்கம் தோண்டி தப்பியது குறித்து ஆட்சித்தலைவர் விசாரணைக்கு மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து டெல்லி தென்மேற்கு மாவட்ட ஆளுநர் ஆங்குர் கார்க், விசாரணை நடத்தி ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.