வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 26 ஜூலை 2014 (14:50 IST)

பிரபலங்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கேங் லீடர் எம்.எல்.ஏ. விடுதியில் கைது

பல பிரமுகர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பலின் தலைவர் எம்.எல்.ஏ. விடுதியில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் 46 வயதுடைய பிலிப் வர்கீஸ் துபாயில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சிக்கு வந்தார்.

அப்போது இவரது நண்பர் ஒருவர் மூலம் ருச்சனா என்ற பெண் அறிமுகம் ஆனார். ஒருசில நாட்களிலேயே அந்த பெண் பிலிப் வர்கீசுடன் தனியாக லாட்ஜுகளில் தங்கும் அளவுக்கு நெருக்கமானார். பிலிப் வர்கீசும் அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார்.

அதன் பிறகு அவர், மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். அங்கு போன பின்பு அவருக்கு ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசியவர் பிலிப் வர்கீசும், ருச்சனாவும் லாட்ஜில் உல்லாசமாக இருந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு சி.டி.யாக இருக்கிறது என்றும், இதை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி தர வேண்டும் எனவும் மிரட்டினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிலிப் வர்கீஸ், உடனடியாக ருச்சனாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரும் பிலிப் வர்கீசிடம் பணம் தந்தால் ஆபாச பட சி.டி. வெளியாகாமல் பார்த்துக் கொள்வதாக கூறினார். அதன் பிறகுதான் பிலிப் வர்கீசுக்கு தன்னை மிரட்டியவருக்கும், ருச்சனாவுக்கும் தொடர்பு இருப்பதை புரிந்து கொண்டார்.

இதையடுத்து அவர், மீண்டும் கொச்சிக்கு வந்து காவல்துறை ஆணையரை சந்தித்து நடந்த விபரங்களை கூறி தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார்.

இதுபற்றி காவல் துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் ஆகியோரில் பெண் சபலத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்து அதனை அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாச படம் எடுத்து ஒரு கும்பல் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்ததை தெரிந்து கொண்டனர்.

இந்த கும்பலை கூண்டோடு பிடிக்க கொச்சி காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் பிலிப் வர்கீஸ் மூலமே அந்த கும்பலை பிடிக்க வலை விரித்தனர். அதன்படி, பிலிப் வர்கீசிடம் ருச்சனாவை தொடர்பு கொண்டு அவர் கேட்ட பணத்தை தருவதாக கூறும்படி தெரிவித்தனர்.

பிலிப் வர்கீசும் ருச்சனாவிடம் இதைக்கூற கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த பணத்தை வாங்க ருச்சனா கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார்.

அங்கு ஏற்கனவே மறைந்திருந்த தனிப்படை காவல்துறையினர் ருச்சனாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், 32 வயதுடைய பிந்தியா தாமஸ், 43 வயதுடைய சனிலான், மற்றும் 35 வயதுடைய பிரதீஷ் ஆகியோர் ருச்சனாவுக்கு உதவி புரிந்ததும் தெரிய வந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு தலைவனாக 44 வயதுடைய ஜெயச்சந்திரன் என்பவர் இருப்பது தெரிய வந்தது.
அவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக அவரது செல்போன் எண்கள் கண்டறியப்பட்டு அதனை காவல்துறையினர் கண்காணித்தனர். இதில், ஜெயச்சந்திரன் திருவனந்தபுரத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி அறையில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இந்த தகவலை சபாநாயகர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். பின்னர் அவரது அனுமதியுடன் உள்ளூர் காவல்துறையினருக்கு தெரியாமல் திடீரென திருவனந்தபுரம் எம்.எல்.ஏ. விடுதிக்குள் புகுந்தனர். அங்கு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரத்சந்திர பிரசாத் என்பவரது அறையில் தங்கி இருந்த ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

இந்தத் தகவல் வெளியானதும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. விடுதிக்குள் குற்றவாளி தங்கியது எப்படி? இவருக்கு துணை போன காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சரத் சந்திரபிரசாத்தையும் கைது செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். இதுபோல பாஜக இளைஞரணியினரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ. சரத் சந்திரபிரசாத் கூறுகையில், எம்.எல்.ஏ. விடுதியில் சுனில் கொட்டாரக்கரா என்ற காங்கிரஸ் பிரமுகருக்காக அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஜெயச்சந்திரன் எப்படி வந்தார்? என எனக்கு தெரியாது.

அவர் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளை நடத்துபவர் என்று மட்டுமே எனக்கு தெரியும். அவரைப்பற்றி வேறு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.