ஒட்டுப்போட முன்பணம் ரூ.15,000 : கருப்பு பணத்தை மாற்ற புதிய ஐடியா
ஒட்டுப்போட முன்பணம் ரூ.15,000 : கருப்பு பணத்தை மாற்ற புதிய ஐடியா
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதால், உத்தர பிரதேச தேர்தலில் ஓட்டுப்போட வாக்களர்களுக்கு முன்தொகை கொடுக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அந்தப் பணத்தை வங்கியிலும் செலுத்த முடியாது. ஏனெனில், 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்திற்கு சரியான கணக்கு காட்டவில்லையென்றால் அவர்களிடமிருந்து 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்த சில அரசியல்வாதிகளுக்கு கிடைத்த பதில்தான் தேர்தல். அதாவது, உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற தேர்தலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அதாவது, தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை பிரித்து, தங்களது தொகுதிகளில் உள்ள வாக்களர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை முன்பணமாக கொடுத்து அவற்றை வங்கிகளில் செலுத்தி, புதிய பணமாக பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனராம்.
இதுபற்றி சில வாக்களர்கள் வேடிக்கையாக கூறும் போது ‘வெளிநாடு வங்கிகளில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று மோடி 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூறினார். அது நடக்கவில்லை. ஆனால், தற்போது அவரது அறிவிப்பால், எங்களுக்கு சில ஆயிரங்களாவது கிடைத்துள்ளது’ என்று கூறுகிறார்கள்.