1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (18:07 IST)

காலை நீட்டிப்படுக்க கைதியிடம் ரூ.100 லஞ்சம் - அக்ரஹார சிறையில் கொடுமை

சசிகலா சிறைப்படுத்தப்பட்டுள்ள பெங்களூர் அக்ரஹார சிறையில், பல்வேறு காரணங்களுக்காக கைதிகளிடம் சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்று வருவது வெளியே கசிந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.   
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார். மேலும், அவரையும், டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
 
மேலும், சசிகலாவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து 5 அறைகளின் புகைப்படங்கள் வெளியானது. மேலும், சிறை வராண்டாவில் சசிகலா சுடிதாரோடு, கையில் கைப்பையுடன் நடமாடும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகியது. இதன் மூலம் சிறையில் அவருக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது அம்பலமானது. 
 
இந்நிலையில், அக்ரஹார சிறையில் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏற்றார்போல் சிறை அதிகாரிகள் கைதிகள் மற்றும் அவர்களை சந்திக்க வருபவர்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளனர் என்பது முன்னாள் கைத் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது. 
 
அதாவது, சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் உடலை ஒரு புறமாக சாய்த்து கொண்டுதான் தூங்க வேண்டும். அப்படியில்லாமல், சௌகரியமாக தூங்கினால், இரவு காவலர் போல் பணியில் ஈடுபடும் தண்டனை கைதி ஒருவர் கையில் கம்புடன் வந்து அடித்து அந்த கைதியின் தூக்கத்தை கெடுப்பாராம். ஆனால், ரூ.100 லஞ்சமாக கொடுத்து விட்டால், கை, கால்களை நீட்டி நிம்மதியாக உறங்க அனுமதி உண்டாம். 
 
இதற்கே ரூ.100 லஞ்சம் எனில், மற்ற வசதிகளுக்கு எவ்வளவு பணம் வசூலிப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.