வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 9 ஜூலை 2015 (09:37 IST)

அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்?: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
அரிசி, இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் உள்ளது.
 
இந்த அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவர், "உலக மயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
 
பருப்பு வகைகளும் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்றன. ஆனால் தர பரிசோதனை நடத்தப்படுவதில்லை. அசல் அரிசியுடன் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது.
 
இதை சாப்பிடும்போது, மிக மோசமான இரைப்பை நோய்கள் ஏற்படுகின்றன. எனவே அரிசி, பருப்பு, பழங்களை மொத்த வியாபார மண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்"  என்று கூறியுள்ளார்.
 
மேலும், பழங்கள் கால்சியம் கார்பைடு மற்றும் ரசாயனங்கள் சேர்த்து இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கை அடுத்த மாதம் 20 ஆம் தேதி தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.