வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வியாழன், 20 ஜூலை 2017 (16:17 IST)

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.


 
 
தற்போதையை குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், ஒவ்வொரு மாநில தலைமைச் செயலகத்திலும் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.
 
மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அன்று இரவே டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இந்த தேர்தலில் 99 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 11 மணி முதல் நடைபெற்றது.
 
வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டது முதல் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வந்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மீரா குமார் 34.35 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதன் மூலம் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14-வது குடியரசுத்தலைவராக வரும் 24-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.