வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (05:41 IST)

சண்டிகரில் தமிழக மாணவர் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

வெளிமாநிலங்களில் படித்து வரும் தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்து கொண்டிருக்கும் சோக நிகழ்வு அவ்வப்போது நடந்து வரும் நிலையில் நேற்று சண்டிகரில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுநிலை மருத்துவம் படித்து வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
 
ராமேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவரின் மர்ம மரணம் குறித்து சண்டிகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் சண்டிகரில் உள்ள நேரு மருத்துவக்கல்லூரி என்ற கல்லூரியில் முதுநிலை படிப்பிற்காக கல்லூரியில் இணைந்த கிருஷ்ணபிரசாத் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.
 
இந்த நிலையில் அவர் தங்கியிருந்த தனியாக விடுதி அறை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கிருஷ்ணபிரசாத் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக கிருஷ்ண பிரசாத்தின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு சண்டிகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
 
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் கிருஷ்ணபிரசாத் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.