வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (15:58 IST)

புரட்சிக் கவியாக மாறிய ப.சிதம்பரம்: பாடல் வரிகளால் நிர்மலாவுக்கு பாராட்டு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாரதியார் பாடல் வரிகளால் பாராட்டித் தள்ளியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஜூலை 6 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது புறநானூறு பாடல் வரிகளை மேற்கோள்காட்டி தாக்கல் செய்தார்.

இதன்பின்பு அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக எம்.பி. ஆ.ராசா, திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பாரதியின் பாடலை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டியுள்ளார்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி’ 

எனும் பெண்களை புகழ்ந்து எழுதப்பட்ட பாரதியார் பாடலை மேற்கொள்காட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டியுள்ளார்.

அதன் பின்னர் கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் நிகழும் அரசியல் சூழலால், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

மேலும் ஜனநாயகம் நாள்தோறும் அடிவாங்கிக் கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் நிலை தற்போது இவ்வாறு தான் உள்ளதால், இதனை தான் குறை சொல்வதற்காக கூறவில்லை எனவும் கூறினார்.