வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (11:08 IST)

மேலும் ஒரு விளையாட்டு வீரர் செல்பி எடுத்த போது மரணம்

மேலும் ஒரு விளையாட்டு வீரர் செல்பி எடுத்த போது மரணம்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பூஜா குமாரி (20), மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இவர் தனது திறமையால் SAI -யின் முன்னணி வீராங்கனையாக உருவாகினார். டெல்லியில் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் தங்கபதக்கம் வென்றுள்ளார்.



இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன், ‘சாய்” முகாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு மழை நீரை சேமித்து வைக்கும் குளத்தின் வடிகால் அருகில் சென்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி குளத்தில் விழுந்துள்ளார். பூஜா குமாரிக்கு நீச்சல் அடிக்க தெரியவில்லை, அவருடன் மேலும் இரண்டு வீராங்கனைகளும் சென்றிருந்தார்கள். அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால், அவர்கள் விடுதிக்கு ஓடிவந்து உதவி கேட்டுள்ளனர். ஆனால், அதற்குள் பூஜா உயிரிழந்துவி்ட்டார். இதுகுறித்து போபால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் ஒரு விளையாட்டு வீரர் செல்பி எடுத்த போது மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், பதாகி டவுனை சேர்ந்தவர் இம்ரான் (24), இவர் உள்ளூர் அளவு மல்யுத்த வீரர். ஞாயிற்றுக்கிழமை மதியம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள விந்தம் நீர்வீழ்ச்சியில் குளிக்க நண்பர் ஷாஹித்துடன் இம்ரான் சென்றார். இந்நிலையில், இம்ரான் செல்பி எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்களும் ஷாஹித்தும் அவரை போக வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

அதை காதில் வாங்கி கொள்ளாமல் சென்ற, இம்ரான், கால் தடுக்கி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற ஷாகித் நீரில் குதித்தும், அவரால் இம்ரானை காப்பாற்ற முடியவில்லை, அவரும் நீரில் சிக்கிக்கொண்டார். ஷாகித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.