நித்தியானந்தா ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின் அறிக்கை ராமநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்புப் புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சி.ஐ.டி. காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. இந்த ஆண்மை மருத்துவ பரிசோதனை அறிக்கையை விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் குழு சி.ஐ.டி. காவல்துறையினரிடம் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், நித்யானந்தா வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சாமியார் மற்றும் அவரது சீடர்கள் 5 பேர் ஆஜரானார்கள். சி.ஐ.டி. காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஷ் தலைமையிலான குழுவினர் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், நித்யானந்தா நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் உறவு கொள்வதற்கான அனைத்துத் திறனும் அவரிடம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த அறிக்கையின் ஒரு நகல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கைக்கு நித்யானந்தா சார்பில் ஆஜராக வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். குரல் சோதனை அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (டிசம்பர்) 3 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.