வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2016 (10:43 IST)

தேசிய கீதமும், தேசியக்கொடியும் அவமதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: மத்திய அரசு கடிதம்

தேசிய கீதமும், தேசியக்கொடியும் அவமதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - மத்திய அரசு கடிதம்

தேசிய கீதம் அவமதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.


 

 
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
தேசிய கீதமும், தேசியக்கொடியும் அவமதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மதிப்பு காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தருணங்களில் இந்திய தேசிய கீதம் பாடப்படுகிறது.
 
தேசிய கீதத்தின் சரியான வடிவம் பற்றியும், அதை எப்போதெல்லாம் பாட வேண்டும் என்பது குறித்தும், அதற்கு மரியாதை தரவேண்டியதின் அவசியம் பற்றியும் அவ்வப்போது வழிமுறைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.
 
தேசிய கீதத்தின் முழு வடிவத்தை தோராயமாக 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும். அதன் குறுகிய வடிவத்தை சில தருணங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த குறுகிய வடிவத்தை 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
 
சில இடங்களில் முக்கிய நிகழ்வுகளில் காகித தேசிய கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்தப்படுவதாகவும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
காகித கொடிகள் போன்று பிளாஸ்டிக் கொடிகள் மட்காது. மேலும் சிதைந்தும் போகாது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல.
 
தேசிய கீதமும், தேசிய கொடியும் அவற்றின் கண்ணியம் குறையாமல் அவற்றுக்கான சட்ட விதிகளின்படி பார்த்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.