வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 24 நவம்பர் 2014 (12:23 IST)

முரளி தியோரா மரணம்: நரேந்திர மோடி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா அதிகாலை 3.25 மணியளவில் மும்பையில் காலமானார், அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஞாயிற்றுக் கிழமைதான் முரளி தியோராவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். ஆனால், இன்று காலை அவர் உயிரிழந்து விட்டதாக செய்தி வெளியானதைக் கேட்டு கவலை அடைந்தேன்.
 
முரளி தியோராவின் மறைவால் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்“ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முரளிதியோரா, மும்பையில் காலமானார். அவருக்கு வயது 77. இருவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியின் மஹாராஸ்டிரா மாநில தலைவராக 22 ஆண்டுகள் பணியாற்றியவர்.
 
முரளிதியோரா காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சராகப் பணியாற்றியவர். பொருளியல் பட்டதாரியான முரளி தியோரா பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 1977 முதல் 1978 வரையில் மும்பை மாநகர மேயராக பணியாற்றினார்.
 
பின்னர் மும்பை தெற்கு தொகுதியில் இருந்து 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்த தொகுதி அவருடைய மகன் மிலிந்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் வெற்றி பெற்று அமைச்சராகப் பணியாற்றியவர். மிலிந்தி தற்போது மாநிலங்கனவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.