வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (16:12 IST)

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கொலை செய்த காதலர்காள்

வடமேற்கு டெல்லியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து அவனது சகோதரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வடமேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் தேஜ்யாஷ் (வயது 19). இவரது சகோதரி நவ்ப்ரீத் கவுர். இவரும் வருண் சவுகான் (வயது 27) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் நவ்ப்ரீத் குடும்பம் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக தேஜ்யாஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இதனால் கோபம் அடைந்த காதல் ஜோடி தேஜ்யாஷை கொலை செய்துவிட்டு, அதன்பின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணினர். அதன்படி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் தேஸ்யாஷை கொலை செய்ய திட்டம் போட்டனர். தங்களின் திட்டப்படி தேஜ்யாஷை கொலை செய்வதற்கு ஏதுவாக கத்தி ஒன்றை வருண் வாங்கியுள்ளான். ஒரு நாள் காலை 9 மணியளவில் நவ்ப்ரீத்தின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட, தேஜ்யாஷ் தூங்கிக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் வருணை தனது வீட்டிற்கு கத்தியுடன் வரவழைத்த நவ்ப்ரீத் அவனை வீட்டிற்குள் அனுமதித்தாள்.
 
பின்னர் அவளும் தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு சென்றுவிட்டாள். வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த தேஜ்யாஷை கொலை செய்ய கத்தியால் அவனை குத்தியுள்ளான் வருண். கத்திக்குத்தி பட்டவுடன் மிரண்டு எழுந்த தேஜ்யாஷ் வருணிடம் இருந்து தனது உயிரை காப்பாற்ற கடுமையாக போராடியுள்ளான். ஆனால் அவனது போராட்டம் தோல்வியில் தான் முடிந்தது. வருண் தங்களது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
 
தேஜ்யாஷ் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறைக்கு தொலைபேசி மூலம் யாரோ ஒருவர் தகவல் தெரிவிக்க, உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், தேஷ்யாஷின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில் காதல் ஜோடி கொலையில் ஈடுபட்டது தெரியவந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.