1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 19 மே 2015 (12:11 IST)

சிறுமி பாலியல் பலாத்காரம் - நிர்வாண கோலத்தில் ஊர்வலம் நடத்தி நூதன தண்டனை கொடுத்த கிராம மக்கள்

15 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது, செருப்பு மாலை போட்டு, நிர்வாண கோலத்தில், கழுதை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்று நூதன தண்டனையை கிராம மக்களே அளித்தனர்.
 
மராட்டிய மாநிலத்தில், அஹமத்நகர் மாவட்டத்தின் வம்போரி கிராமத்தை சேர்ந்த சுபம் பார்டியா (19) என்ற வாலிபர், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு ஜாதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
 
மேலும், தன் மீது மிகுந்த காதல் கொண்ட அந்த சிறுமியின் யதார்த்தத்தை பயன்படுத்தி, தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த சிறுமியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை எல்லாம் வீடியோவாகவும், போட்டோவாகவும் பதிவு செய்துள்ளார்.
 
பின்பு, தான் கூறுவது போல் நடக்கவில்லை எனில், அந்தக் காட்சிகளை வெளியே பரப்பிவிடுவேன் என அச்சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சொல்லெனா துயரம் அடைந்த அச்சிறுமி இது குறித்து, தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
 
இதைக் கேட்டு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அச்சிறுமியின் உறவினர்கள், சுபம் பார்டியாவை நிர்வாணப்படுத்தி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து, கழுதை மீது அமர வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று நூதன தண்டனை கொடுத்தனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, சுபம் பார்டியாவின் பெற்றோர்களையும், உறவினர்களையும் கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
 
இந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிறுமியின் உறவினர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டதாக கூறி, 17 பேரை கைது செய்தனர்.
 
இந்நிலையில், சுபம் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, அச்சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த நபரின் கழுத்தில் செருப்பு மாலை போட்டு, கழுதை மீது நிர்வாண கோலத்தில் அமர வைத்து  ஊர்வலம் நடத்திய சம்பவம் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.