வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (14:30 IST)

சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறிய மோடி

உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார்.


 

 
அவரின் உடல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடியுள்ளனர். 
 
இந்நிலையில் பிரதமர் மோடி, ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானம் மூலம் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார். அதன் பின் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கிருந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 
 
மோடி அருகில் வந்ததும் சசிகலா கண்ணீர் விட்டார். அப்போது, சசிகலாவின் தலையில் கை வைத்து மோடி ஆறுதல் கூறினர். அருகில் இருந்த ஓ.பன்னீர் செல்வமும் கதறி அழுதார். அவரின் கை பிடித்து மோடி ஆறுதல் கூறினார்.
 
அதன் பின், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.