2 ஆம் வகுப்பு சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த 9 ஆம் வகுப்பு மாணவன்
கழிப்பறைக்குச் சென்ற 2 ஆம் வகுப்பு சிறுமியை 9 ஆம் வகுப்பு மாணவன் ஆபாசமாகப் படம் எடுத்த அதிர்ச்சிகர சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனை உறுதிபடுத்தும் வகையில், ஹைதராபாத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஹைதராபத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் கழிவறைக்குச் சென்ற 2 ஆம் வகுப்பு மாணவியை 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பின்தொடர்ந்து சென்றுள்ளான். அங்கு அந்த சிறுமியை ஆபாசமான நிலையில் செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். அதைக் கழிப்பறைக்குள் இருந்த மற்ற இரண்டு சிறுமிகளும் பார்த்துள்ளனர். இது கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. அந்த வீடியோ தற்போது எம்.எம்.எஸ். மூலம் பரவி வருகிறது.
இதுகுறித்து அறிந்த பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள், கடும் அதிர்ச்சியடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று அவர்கள் கடுமையாகக் குற்றம்சாட்டினர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆபாச வீடியோ எடுத்த மாணவன் யார் என்பது இதுவரை அடையாளம் தெரியவில்லை என்றும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.