டெல்லி எயிம்ஸ் மருத்துவ விடுதியில் மாணவி தற்கொலை
நேற்று அதிகாலை டெல்லி எயிம்ஸ் மருத்துவ மாணவி தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் குஷ்பூ. இவர் கடந்த ஜூலை மாதம் தான் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது விடுதி அறையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சக மாணவர்கள் மற்றும் விடுதி காப்பாளரின் தகவலின் பேரில் அங்கு காவல் துறையினர் வந்தபொழுது அந்த அறை வெளிப்புறமாக பூட்டி இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்ற காவலர்கள் மின்விசிறியில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரின் அறை மற்றும் செல்போனை சோதனை செய்த காவல் துறையினர் அதில் தற்கொலை குறித்த எந்தவித குறிப்பும் இல்லை என தெரிவித்தனர்.
இந்த தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், ஜூலை மாதம் தான் இவர் முதலாமாண்டில் சேர்ந்துள்ளதால் ராகிங் அல்லது வேறு ஏதாவது மன அழுத்தமாக இருக்கலாம் என மருத்துவ கல்லுரி மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.