வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (17:44 IST)

இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் மனைவியின் உடலுடன் வங்கியின் முன் அமர்ந்த முதியவர்!

இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் மனைவியின் உடலுடன் வங்கியின் முன் அமர்ந்த முதியவர்!

கடந்த 8-ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் விநியோகித்து வருகிறது அரசு.


 
 
ஆனால் வங்கியில் மக்கள் தங்கள் பணத்தை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. இதனால் மக்களிடையே பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது. பல்வேறு அவசர தேவைகளுக்கு பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் மக்கள்.
 
வங்கிகளில் அதிகபட்சமாக மக்கள் ஒரு வாரத்துக்கு 24000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதே போல ஏடிஎம்கள் மூலமாகவும் ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும். இது நாட்டு மக்களிடையே பல்வேறு சிக்கல்களை உருவாக்கி உள்ளது.
 
இந்நிலையில் நோடியாவில் 65 வயதான் முன்னி லால் என்ற தினக்கூலி தொழிலாளி தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்கு பணம் எடுக்க முடியாமல் வங்கியின் முன்னால் இறந்த மனைவியின் உடலுடன் அமர்ந்த பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
 
புற்று நோயால் இறந்த தாயின் இறுதிச்சடங்கிற்கு அவரது மகன் வங்கி கணக்கில் 16000 ரூபாய் போட்டுள்ளார். அதனை எடுக்க முன்னி லால் நீண்ட வரிசையில் நின்றுள்ளார். ஆனால் வங்கியில் பணம் கிடைக்கவில்லை. தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்காக பணம் எடுக்க வேண்டும் என முன்னி லால் கெஞ்சியும் வங்கி ஊழியர்கள் அவர் பொய் சொல்கிறார் என அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இதனால் வேறு வழியில்லாமல் முன்னிலால் இறந்த தனது மனைவியின் உடலுடன் வங்கியின் முன்னால் அமர்ந்து விட்டார். அவரது நிலமையை பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர் 2500 ரூபாயும், அரசியல்வாதி ஒருவர் 5000 ரூபாயும் வழங்கி உதவியுள்ளார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பணம் எடுக்க விதிவிலக்கு அளித்திருக்கும் அரசு மரணம் போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கு பணம் எடுக்கவும் விதிவிலக்கு அளித்தால் முன்னி லால் போன்றோருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை வேறு யாருக்கும் ஏற்படாது.