செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (13:38 IST)

திருமணமான பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம்

பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் : ஆந்திராவில் அதிர்ச்சி

ஒரு நபரின் இரண்டாவது மனைவியை, முதல் மனைவியின் குடும்பம் அடித்து சித்ரவதை செய்ததோடு, அந்த பெண்ணை நிர்வானமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரம் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
வாரங்கல் மாவட்டம் பி.சி.தண்டா என்ற கிராமத்தில் வசிப்பவர் ரவி. இவர் ஆட்டோ ஓட்டுகிறார். அவருக்கு சொரூபா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
 
ரவிக்கு அதே ஊரைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால், அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே குடி வைத்தார். அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
 
அனிதா விஷயமாக சொரூபா அடிக்கடி ரவியுடன் தகராறு செய்து வந்தார். சண்டை முற்றிய நிலையில், ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார் சொரூபா.
 
பஞ்சாயத்தில் தன்னுடைய முதல் மனைவியுடன் வாழப்பிடிக்க வில்லை என்றும் அவரை விவாகரத்து செய்வதாகவும் ரவி கூறினார். அதை ஏற்றுக் கொண்ட பஞ்சாயத்து, அதற்கு நஷ்டஈடாக 7.5 லட்சத்தை சொரூபாவுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
ரவி அதற்கு சம்மதித்தார். ஆனால், அந்தப் பணத்தை சொரூபா கையில் கொடுக்க முடியாது என்றும், தங்களின் குழந்தைகளின் பேரில்தான் டெபாசிட் செய்வேன் என்றும் பிடிவாதமாக கூறிவிட்டார்.
 
இது சொரூபாவின் உறவினர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ரவியை அங்கேயே தாக்கியுள்ளனர். மேலும் ஆவேசம் அடைந்த அவர்கள், நேராக அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து உதைத்துள்ளனர். அங்கிருந்து அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையை எடுத்து அவரது உடலில் சூடு போட்டுள்ளனர்.
 
அதற்கு மேலும் ஆத்திரம் தீராத அவர்கள், அனிதாவை நிர்வாணப்படுத்தி அந்த கிராமம் முழுவதும் ஊர்வலமாக கூட்டி வந்தனர். அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர அனிதாவை யாரும் காப்பாற்றவில்லை.
 
இதனிடையில், ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் வந்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் சொரூபா குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.