1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (17:49 IST)

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் : கண்டு கொள்ளாத போலீசார்

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் : கண்டு கொள்ளாத போலீசார்

பண விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், மனைவி மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் மீது, கணவன் ஆசிட் ஊற்றிய கொடூரம் டெல்லியில் நிகழ்ந்த்துள்ளது.


 

 
டெல்லியில் வசிப்பவர் பிரதீப் சிங்(34). அவர் 21 வயது ஒருவரை சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். பிரதீப்பிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால், தனது மாமியார் வீட்டாரிடம் சென்று பணம் வாங்கி வரச் சொல்லி அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
 
ஒரு கட்டத்தில், மாமியார் வீட்டிற்கு சென்று நகைகளை திருடி வரச் சொல்லியிருக்கிறார். ஆனால், இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த பெண்ணின் தாய், அவரை வீட்டிற்குள்ளேயே விடவில்லை. அதன்பின், தனது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார் பிரதீப். 
 
இந்நிலையில், பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று  அப்பெண்ணை ஒரு பூங்காவிற்கு வரச் சொல்லியிருக்கிறார் பிரதீப். எனவே அவர், தனது 10 வயது தங்கையுடன் அங்கு சென்றுள்ளார். அங்கேயும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண்ணை தாக்கியதோடு, அவரின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார் பிரதீப். இதனால் உடல் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த அப்பெண்ணின் தங்கை மீதும் ஆசிட்டை ஊற்றியுள்ளார் பிரதீப்.
 
கடந்த சில மாதங்களாகவே பிரதீப்  அப்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்துள்ளார். கடந்த மாதம், அவரை வீட்டிற்குள் அடைத்து, கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு அவரை கொல்ல முயன்றுள்ளார். ஆனால், எப்படியோ அவர் அங்கிருந்து தப்பி விட்டார். அதன்பின் அவர் தன்னுடைய தாயின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அப்பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
 
மேலும், இதுபற்றி போலீசாரிடம் புகார் கூறிய போது, இது உங்கள் குடும்ப பிரச்சனை.. நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.