வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 15 மே 2017 (11:42 IST)

மம்தா பானர்ஜி ஒரு திருநங்கை, வெட்கப்பட்டால் கடலில் குதிக்கட்டும்: பாஜகவின் சர்ச்சை கருத்துக்கள்!

மம்தா பானர்ஜி ஒரு திருநங்கை, வெட்கப்பட்டால் கடலில் குதிக்கட்டும்: பாஜகவின் சர்ச்சை கருத்துக்கள்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு திருநங்கை எனவும், அவர் ஆணா? பெண்ணா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப்பட்டால் கடலில் குதிக்கலாமே எனவும் பாஜக தலைவர்கள் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்த மாநிலத்தை ஆட்சி செய்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிப்பவர்களில் முதன்மையானவர் மம்தா பானர்ஜி.
 
இவர் கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் நாட்டில் பிறந்ததில் வெட்கப்படுகிறேன் எனவும் அனைத்து மதத்தினரும் அமைதியாக, அறநெறியுடன் வாழ வேண்டும் என கூறினார்.
 
இந்நிலையில் மம்தாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசிய ஹரியான மாநில அமைச்சர் அனில் விஜ் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவில் பிறந்ததுக்காக மம்தா பானர்ஜி வெட்கப்பட்டால் பேசாமல் கடலில் குதிக்கலாம். கொல்கத்தாவுக்கு மிக அருகிலேயே கடல் இருக்கிறது. அங்கு சென்று அவர் குதிக்கட்டுமே என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர்களில் ஒருவரான ஷ்யாமபதா மண்டல் மம்தா பானர்ஜியை திருநங்கை என்றும், மம்தா ஆணா? பெண்ணா? என்பதே சந்தேகமாகவுள்ளது என்றும் பேசியது மேற்கு வங்கத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.