1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (07:55 IST)

சமையல் எரிவாயு மானியத்தைக் குறைக்கும் எண்ணம் இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை

சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அறிவித்துள்ளது.
 
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது.
 
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் தொடரும். எனவே பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
 
நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதுபோல, மானியங்களை சீர்படுத்தவும், விநியோகத்தில் உள்ள குறைகளை நீக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
 
மானியங்களை குறைக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சமையல் எரிவாயு, மண்எண்ணெய் மானியங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் நலன் கருதி வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றுதான் நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 
 
சமையல் எரிவாயு மானியம் நேரடியாக வழங்கும் திட்டத்தின்படி இதுவரை ரூ.6,335 கோடி 11.5 கோடி மக்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் உற்பத்திவரி விதிக்கப்பட்டது, சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், கல்வி போன்றவற்றுக்காக ரூ.40 ஆயிரம் கோடி திரட்டும் வரை மட்டுமே நீடிக்கும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.