வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (16:03 IST)

11 பேர் தற்கொலை : மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா

டெல்லி புராரி பகுதியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் லலித் பாட்டியா என்பவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

 
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும், முதியவரான நாராயணி தேவி மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர். 
 
வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகளில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், வீட்டிற்குள் இருந்து 11 குழாய்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. அந்த அறையில்தான் அவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அதாவது, தங்கள் ஆன்மா அந்த குழாய் வழியாகவே வெளியேறும் என அவர்கள் தங்கள் டைரியில் குறிப்பிட்டுள்ளனர்.  

 
வீட்டின் அருகிலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகப்படும்படி யாரும் அன்று அவர்களின் வீட்டிற்கு வரவில்லை. மாறாக இரவு 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வருவதும், சிறுவர்கள் கயிறுகளை எடுத்து வருவதும் பதிவாகியுள்ளது. எனவே, அவர்கள் சொர்க்கத்தை அடையவேண்டும் என விரும்பியே தற்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், லலித் பாட்டியா என்பவரே இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. லலித் பாட்டியா பேய், ஆவி, ஆன்மா ஆகியவை குறித்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். ஆவிகளுடன் பேசும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருதார். இது தொடர்பாக பல புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. டைரிகளிலும் இது பற்றிய குறிப்புகளை அவர் எழுதி வைத்துள்ளார். 
 
எனவே, மூடநம்பிக்கையை வீட்டில் உள்ளவர்களின் மனதில் ஏற்றி அவர்தான் அனைவரையும் தற்கொலை செய்யும் அளவுக்கு மூளைச்சலவை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.