வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:17 IST)

தமிழக போராட்டத்தின் எதிரொலி; பீட்டாவிற்கு கர்நாடகாவிலும் எதிர்ப்பு

பீட்டாவிற்கு எதிராக தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்திலும் பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட வேண்டும் மற்றும் பீட்டா அமைப்பிற்கு தடை செய்ய வேண்டும்  என சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களோடு பொதுமக்களும் கைகோர்த்தனர். இதனால், தமிழக அரசு வேறு வழியில்லாமல் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. 
 
இதைக்கண்ட மற்ற மாநிலங்களும் தற்போது நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள தங்கள் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
 
கர்நாடகாவில் பல வருடங்களாக ‘கம்பாளா’ போட்டி நடைபெற்று வந்தது. எருதுகளை வைத்து நடத்தப்படும் இந்த போட்டிக்கு தடை கேட்டு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  நீதிமன்றமும் தடை விதித்தது.  இந்நிலையில், தமிழக அரசு போல், நாங்களும் கம்பளா போட்டியை நடத்தை அவசர சட்டம் கொண்டு வருவோம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 
மேலும், தமிழக மாணவர்களை போல், கர்நாடகாவிலும் ஏராளமான இளைஞர்கள் பீட்டாவிற்கு தடை கேட்டு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.  ஹூபி, மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் எருமை மாடுகளுடன் வந்த இளைஞர்கள், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது பீட்டா அமைப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.