1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (03:26 IST)

எம்.எம்.கல்பர்கி படுகொலை: ராம சேனை முக்கிய நிர்வாகி பிரசாத் அட்டவார் கைது

கன்னட எழுத்து உலகில் தனி முத்திரை பதித்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி படுகொலையில், ஸ்ரீராம் சேனா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி பிரசாத் அட்டவார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
கன்னட எழுத்து உலகில் தனி முத்திரை பதித்தவர் எம்.எம்.கல்பர்கி. மார்கா 4 என்ற கல்பர்கியின் 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக, சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மேலும், பம்பா, ருபதுங்கா போன்ற பல்வேறு புகழ் பெற்ற விருதுகளை கல்பர்கி பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில், தர்வாத்தில் உள்ள  எம்.எம்.கல்பர்கியின் இல்லத்திற்கு சென்ற மர்ம நபர்கள் சிலர், அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு, கதவை கல்பர்கி திறந்துள்ளார்.
 
அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில், கல்பர்கி மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
 
உடனே, கல்பர்கியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது, கல்பர்கியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்னகவே, கல்பர்கி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
 
கல்பர்கி படுகொலைக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கல்பர்கியின் மரணம், கர்நாடகாவில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், கல்பர்கி படுகொலைக்கு காரணமான ஸ்ரீராம் சேனா என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி பிரசாத் அட்டவாரை போலீசார் கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
 
அப்போது, பல திடுக்கும் தகவல்களை ஸ்ரீராம் சேனா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி பிரசாத் அட்டவா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வாக்கு மூலம் மிக ரகசியமாக வைக்கப்டபட்டுள்ளது.
 
மேலும், இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சிலரும் சிக்க உள்ளனர். அவர்களையும் கைது செய்த பின்பு, காவல்துறை விரிவான அறிக்கை வெளியிடும் என்கின்றனர்.