1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2015 (11:42 IST)

நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம்: மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு

உச்ச நீதிமன்ற நீதிபத்கள் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்யும் நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
 
உச்ச நீதிமன்ற நீதிபத்கள் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ‘கொலிஜியம்’ என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இதற்கு பதிலாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் மூலம் நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
 
இது குறித்து தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான 99 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தார்.
 
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட இரு சட்டங்களையும் மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது. அதில், இரு சட்டங்களும் நேற்றைய தினத்தில் இருந்து அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘கொலிஜியம்’ போலவே, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே தலைவராக இருப்பார். உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், மதிப்புவாய்ந்த இரண்டு நபர்கள் ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
 
மதிப்புவாய்ந்த இரண்டு உறுப்பினர்களை பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய கமிட்டி நியமிக்கும். எதிர்க்கட்சி தலைவர் இல்லாதபட்சத்தில், மக்களவையில் அதிக உறுப்பினர்களைப் பெற்ற எதிர்க்கட்சியின் தலைவர், இந்த கமிட்டியில் இடம்பெறுவார்.
 
மதிப்புவாய்ந்த இரண்டு பேரில் ஒருவர் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகிய பிரிவினரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.