1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (08:06 IST)

'அண்ணா' உணவகங்கள் மூடல்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு பொதுமக்கள் கண்டனம்!

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் பதவியை ஏற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக எடுத்து வந்தார். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் தற்போது முதல்முறையாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 
 
தமிழகத்தில் அம்மா உணவகங்கள் இருப்பது போல் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஆந்திராவில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணா உணவகங்களை மூட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த உணவகங்களின் ஒப்பந்த காலம் கடந்த புதன்கிழமை உடன் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய அரசு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து வியாழக்கிழமை முதல் அனைத்து 'அண்ணா' உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் ஏழை எளியவர்கள் குறைந்த விலையில் உணவு கிடைக்காமல் தவிப்பதால் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் 
 
 
இந்த அண்ணா உணவகங்களில் 5 ரூபாய்க்கு காலை டிபன் மற்றும் 5 ரூபாய்க்கு மதிய சாப்பாடு உணவுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இனிமேல் ஏழை எளியவர்கள் அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை பழிவாங்கும் அரசியல் என்றும், தன் மீது உள்ள கோபத்தில் ஏழைகள் வயிற்றில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிப்பதாகவும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் இதுகுறித்து விளக்கம் கூறிய போது 'அண்ணா உணவகங்கள் கட்டியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் இந்த ஊழல் விசாரிக்கப்படும் என்றும், விரைவில் புதுப்பொலிவுடன் குறைந்த விலை உணவகங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்