1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (18:13 IST)

ஏர்-இந்தியா விமானங்களைக் கடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம்

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களைக் கடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, முக்கிய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

 
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் கடல் வழியாகவோ அல்லது வான் வழியாகவோ தாக்க முயற்சிப்பார்கள் என்பதால், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாட்னாவில், நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு முன்பாக நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்துள்ள உள்துறை அமைச்சகம், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் மற்றும் அதன் நட்பு அமைப்புகளான இந்திய முஜாஹிதீன் போன்றவை தீவிரவாத தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.